பொதுவாக, சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருக்கிறது.
அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. தலைமுடி மற்றும் தோல் ஆகியவை பொலிவுடன் இருக்க கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால், உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது. கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
சரி இனி கறிவேப்பிலை கொண்டு கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
உருவிய கறிவேப்பிலை – 2 கப்,
எண்ணெய் – 3 ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 2,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
கறிவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம்போக நிழலில் உலர விடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலையை மொறு மொறுப்பாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். பிறகு, இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நைஸாகப் பொடிக்கவும்.
இதனை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்தப் பொடி, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்றது.
குறிப்பு:
கறிவேப்பிலை, தலை முடியின் கருமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.