ஒருவர் சூதாட்டத்தின் போது எழுந்து செல்ல நேரமில்லாமல் சாப்பிட உருவாக்கப்பட்ட உணவு தான் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ள சாண்ட்விச் ஆகும்.
18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜான் மாண்டேகு என்ற நபர் அரசு அதிகாரியாக இருந்தார். இவரின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டம் சாண்ட்விச் ஏர்ல் (Earl of Sandwich).
இவர் 4வது சாண்ட்விச் ஏர்ல் என்பதால், ஜான் மாண்டேகு சாண்ட்விச் ஏர்ல் என்று அழைத்தனர். இவருக்கு சூதாடும் பழக்கம் இருந்துள்ளது.
சூதாடும் போது டேபிளை விட்டு எழுந்திருக்காமல் இருக்க உணவை இரண்டு பிரட்டுகளுக்கு நடுவில் வைத்து கொடுக்க கூறியுள்ளார். இப்படி சாப்பிடும் போது சீட்டு கட்டுகளின் மேல் உணவு ஒட்டாமல் இருக்கும்.
அதே நேரம் வயிறும் நிறையும் என அவர் இதுபோன்று செய்தார் என கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து விளையாடுபவர்களும் அவர் ஆர்டர் செய்த அதே உணவை ஆர்டர் செய்துள்ளனர்.
நாளிடைவில் அவரின் பெயருக்கு பின் இருக்கும் சாண்ட்விச் என்ற பெயரே அந்த உணவிற்கு வந்துவிட்டது. சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகி விடுவார்கள்.
அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி வேலை எளிதாக முடிந்து விடும்.
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10,
குடமிளகாய், கேரட் - தலா 1,
தக்காளி, வெங்காயம் - தலா 2,
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,
வெண்ணெய் - 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத் தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது.
சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.