சுவையான தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி?





சுவையான தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி?

0

ஆப்பம் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு காலை நேர உணவு வகை. 

சுவையான தேங்காய் பால் ஆப்பம்
குறிப்பாக தமிழகத்தில் இவை மிகவும் பிரபலமான மற்றும் ஒரு பாரம்பரியமான உணவு வகை. ஆப்பத்தில் பல வகை உண்டு. 

அதில் பிளைன் ஆப்பம், தேங்காய் பால் ஆப்பம், இடியாப்பம், முட்டை ஆப்பம், அச்சா ஆப்பம், மற்றும் நெய் ஆப்பம் குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது தேங்காய் பால் ஆப்பம். 

தேங்காய் பால் ஆப்பத்தின் ஸ்பெஷல் என்ன வென்றால் இதை பலரும் நினைப்பதை விட வெகு சுலபமாக நாம் செய்து விட முடியும். 

தற்போது இருக்கும் இயந்திரமயமான உலகில் இன்ஸ்டன்ட் ஆக கடைகளில் கிடைக்கும் மாவுகளை பயன்படுத்த தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். 

ஆனால் இதை அதிக வேலையின்றி நம் வீட்டிலேயே வெகு சுலபமாக தயார் செய்து விடலாம். அது மட்டுமின்றி தேங்காய் பால் ஆப்பம் உடம்பிற்கு மிகவும் நல்லதும் கூட. 

உடம்பு சரியில்லாதவர்களுக்கு மருத்துவர்களே தேங்காய் பால் ஆப்பம் அல்லது இடியாப்பத்தை உண்ண பரிந்துரைப்பது வழக்கம். ஏனெனில் தேங்காய் பால் ஆப்பம் வயிற்றுக்கு மிகவும் உகந்தது. 

மேலும் தேங்காய் பால் உடம்புக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதற்கு வயிற்று புண்ணை ஆற்றும் தன்மையுண்டு. அதனாலேயே ஆப்பம் பெரும்பாலும் தேங்காய் பாலுடன் தான் பரிமாறப்படுகிறது. 

இருப்பினும் வெஜிடபிள் குருமா, காலிஃப்ளவர் குருமா, ஆட்டுகால் பாயா, அல்லது சிக்கன் குருமாவும் தேங்காய் பால் ஆப்பத்திற்கு அட்டகாசமாக இருக்கும். 

இப்பொழுது கீழே தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

1 கப் இட்லி அரிசி

2 கப் பச்சரிசி

1 கப் துருவிய தேங்காய்

1 தேங்காய்

1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

½ மேஜைக்கரண்டி வெந்தயம்

½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்

½ மேஜைக்கரண்டி சர்க்கரை

தேவையான அளவு உப்பு

செய்முறை

ஆப்பம் செய்வதற்கு முந்தைய நாளில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, மற்றும் வெந்தயத்தை நன்கு சுத்தம் செய்து கழுவி 

அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற விட்டு பின்பு அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்..

பிறகு நாம் அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சர்க்கரை, சிறிதளவு உப்பு, மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி 

அதை தோசை மாவை விட சிறிதளவு கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும். (மாவு அதிகம் கெட்டியாக இருந்தால் அது சீக்கிரமாக புளிக்காது.)

பின்னர் மாவு இருக்கும் பாத்திரத்தில் ஒரு மூடியை போட்டு அதை அப்படியே வைத்து சுமார் 6 லிருந்து 8 வரை புளிக்க விடவும்.

8 மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை தடவி அதை சுட வைக்கவும்.

கடாய் சிறிது சூடானதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி கடாயை ஒரு இடுக்கியின் மூலமோ அல்லது ஒரு துணியின் மூலமோ பிடித்து பக்குவமாக சுற்றி மாவை பரப்பி விடவும். 

பிறகு கடாயில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும். 

ஒரு நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பால் ஆப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் உடம்புக்கு மிகவும் நன்மையான ஆப்பம் தேங்காய் பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)