தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
தக்காளி1 – 1
காளான் – 3
தக்காளி சாஸ் – இரண்டு டேபிள் ஸ்பூன்
சீஸ்(துருவியது) – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகிய வற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.
தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.
அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.
கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேக விடவும்.
சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.