லட்டு என்றால் அனைவருக்கு ஞாபகம் வருவது திருப்பதி தான். ஏனெனில் திருப்பதி சென்றால், அங்கு பிரசாதமாக லட்டை தான் வழங்குவார்கள்.
அத்தகைய லட்டு வெங்கடாசலபதிக்கு மட்டும் விருப்பமானது அல்ல, முதன்மை கடவுளான விநாயகருக்கும் தான் மிகவும் பிடித்தது.
அதிலும் விநாயகர் சதுர்த்தி என்று வந்தால், அனைத்து வீட்டிலும் சாமி கும்பிடுவதற்கு நிறைய பலகாரங்களை செய்வார்கள்.
அத்தகைய லட்டை ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
பால் - 500 மிலி
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 3 கப்
பாதாம் - சிறிது
பிஸ்தா - சிறிது
பாகுவிற்கு...
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3 கப்
பால் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு உருக வைத்துக் கொள்ளவும்.
பின் அதில் பாகுவிற்கு குறிப்பிட்டுள்ள பாலை ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விடவும்.
அப்போது சிறிது நேரம் கழித்து மேலே நுரை போல் வரும்.
அந்நேரத்தில் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, நிறத்திற்கு கேசரிப் பவுடர் சேர்த்து, நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவையும், பாலையும் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும்,
ஒரு ஓட்டையாக இருக்கும் கரண்டியை எடுத்து, அதன் ஓட்டையில் இந்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.
* இதனால் அந்த மாவு துளி துளியாக எண்ணெயில் விழுந்து, பூந்தி போன்று பொரியும்.
அதனை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் இதேப் போல் செய்ய வேண்டும்.
* இப்போது பொரித்து வைத்துள்ள பூந்தியை தட்டில் போட்டு, அதன் மேல் சர்க்கரை பாகுவை ஊற்றி, பரப்பி விடவும்.
பின்னர் அதில் லேசாக சூடான நீரை தெளித்து, லட்டு போன்று பிடித்து வைக்கவும்,
பின் அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான மோத்தி சூர் லட்டு ரெடி!