ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி?





ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி?

உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். 
ராகி சேமியா உப்புமா
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது. 

உப்புமா செய்வது பெரிய வேலை கிடையாது. ஆனால் அது சொதப்பாமல் செய்ய வேண்டும். உப்புமா செய்வதிலும் பக்குவம் இருக்கு. 

பெரும்பாலானோர் உப்புமா உதிரி உதிரியாக வராமல் கையில் ஒட்டி வருகிறது என நினைத்திருப்பர். இதற்கு காரணம் தண்ணீர் மற்றும் ரவையின் அளவு தான். 
இதை சரியாக செய்ய வேண்டும். சுவையான ராகி சேமியா உப்புமா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானவை:

ராகி சேமியா - சுமார் 100 கிராம் (பாதி பாக்கெட்)

சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - சிறிது

பச்சை மிளகாய் - 1

கேரட் - 1 (சிறியது)

பீன்ஸ் - 5

கொத்து மல்லி இலை - கொஞ்சம்

எலுமிச்சை சாறு - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 5 நிமி ஊற வைக்கவும். பிறகு நீரை வடிய வைக்கவும். 

வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்து விடும். வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லிய தாக நறுக்கவும். ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டி யதைத் தாளித்து விட்டு, 
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கேரட் & பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும்.ஏற்கனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு, கொத்து மல்லி இலை தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags: