தேவையான பொருள்கள் :
பச்சரிசி - ஒரு கப்
பலாச்சுளை - ஒரு கப்
வெல்லம் - 1/4 - 1/2 கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - சிறிது
மிளகு - 4
தேங்காய் துருவல் / பொடியாக நறுக்கியது - கால் கப்
உப்பு - தேவையான அளவு
வாழை இலை
செய்முறை:
பச்சரிசியை 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். பலாச்சுளைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி வைக்கவும்.
அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மிளகு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பலாச்சுளைகளையும் சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் வெல்லம் சேர்த்து அரைக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
பிறகு தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
வாழை இலையை நறுக்கி லேசாக நெருப்பில் வாட்டி எடுக்கவும். (நெருப்பில் வாட்டுவதால் மடிப்பதற்கு சுலபமாக இருக்கும்).
பிறகு வாழையிலையின் மேல் மாவுக் கலவையை பரப்பவும்.
படத்தில் உள்ளது போல இலையின் நான்கு பக்கமும் மடித்து மூடவும். இதே போல மீதமுள்ள மாவையும் தயார் செய்யவும்.
மாவு வைத்து மடித்த இலைகளை இட்லி பானையில் அடுக்கி, மூடி வைத்து வேக வைக்கவும். (20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்கள் வரை ஆகலாம்.
மாவை எவ்வளவு கனமாக பரப்பியிருக்கிறீர்கள் என்பதை சார்ந்து நேரம் மாறுபடும்). சுவையான ஹலசினஹன்னு ஹிட்டு / கடுபு தயார்.