ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்தங்களி செய்வது எப்படி?





ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்தங்களி செய்வது எப்படி?

0
பீட்ஸா, பர்கர், சமோசா, சென்னா, கட்லெட், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பரோட்டா இப்படி சாப்பிடும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய உணவையும் அவ்வபோது செய்து கொடுங்கள். 
ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்தங்களி செய்வது எப்படி?
சத்தும் ருசியும் நிறைந்த இவைதான் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதையும் புரிய வையுங்கள்.
உளுந்தப் பணியாரம், அத்திகா பணியாரம், உளுந்துப் பொடி, உளுந்தங்களி என்று பல விதமான பலகாரங்கள் பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் எப்போதும் மாலை நேரங்களில் வீடுகளில் செய்யப்படுவது உண்டு.

இன்று நேரமின்மையும் நவீன உணவுகளும் இதை மறக்கடித்தாலும் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் இந்த தோல் உளுந் தால் செய்யப்பட்ட உணவு வகைகளை அவ்வப்போது கொடுக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பருவமடைந்த முதல் மூன்று மாதங்களில் மாதந்தோறும் மாதவிடாய் காலங்களில் உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். 

சத்து மிக்க உளுந்தங்களி அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான மாலை நேர சிற்றுண்டி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
தேவையான பொருள்கள்

கருப்பு உளுந்து- 2 கப் (எல்லா கடைகளிலும் கிடைக்கும்)

பச்சரிசிமாவு - அரை கப்

பனங்கருப்பட்டி- 3 கப்

நல்லெண்ணெய்- 1 கப்

சுக்குப்பொடி, ஏலப்பொடி- அரை டீஸ்பூன்

உப்பு- 1 சிட்டிகை.

செய்முறை
ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்தங்களி செய்வது எப்படி?
கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து கழுவி காய வைத்து அகன்ற வாணலியில் எண்ணெய் விடாமல் சிறிது சிறிதாக சேர்த்து உளுந்தின் பச்சை வாசனை போக வறுக்கவும். 

அதிகமாகவும் வறுக்க வேண்டாம். வறுத்த உளுந்தை சூடு ஆறியதும் மிஷினில் கொடுத்து மைய அரைக்கவும். மிக்ஸியில் பொடிக்கலாம். 

ஆனால் மைய அரைத்தால் தான் களி நன்றாக இருக்கும். அரைத்த உளுந்துமாவுடன் அரிசி மாவு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

அடுப்பில் பனங்கருப்பட்டியுடன் சிறிதளவு நீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகு பதம் முதிரக்கூடாது. பாகு பதம் வரும் போது அதிலிருக்கும் கசடுகளை நீக்கி விட்டு அரிசி உளுந்து கலந்த மாவை சிறிது சிறிதாக தூவியபடி சேர்த்து கிளறவும்.

நல்லெண்ணெயை அவ்வபோது சேர்த்து கிளறியபடி இருக்கவும். எண்ணெய் மொத்தமாக சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். 
இல்லையென்றால் களி அடிப்பிடிக்க கூடும். அல்லது கெட்டிப்படும். அரை மணி நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். 

இப்போது சுக்குப்பொடி ஏலப்பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். களி எண்ணெயுடன் சேர்ந்து அல்வா பதத்துக்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.

அப்படியே தட்டில் போட்டு நடுவில் குழியாக்கி நெய் விட்டு சுடச்சுட சாப்பிடலாம்.அல்லது குழந்தைகள் விரும்பும் வண்ணம் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகவும் பிடித்து வைக்கலாம். 

நல்லெண்ணெயும் உளுந்துமாவும் நன்றாக கலந்து பளபளவென்று பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும். இந்த களி மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வெளியில் வைத்தே சாப்பிடலாம். கெடாமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு எப்போதும் பிஸ்கட், நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக இந்த உருண்டையை ஸ்நாக்ஸ் போல் கொடுக்க லாம். விரும்பி சாப்பிடுவார்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
குறிப்பு

நமது முன்னோர்கள் நல்லெண்ணெய்க்கு பதிலாக பசு நெய் கலந்து செய்து தருவார்கள். ஆனால் இது ஒரு உருண்டைக்கு மேல் சாப்பிட முடியாது. அதிக நெய் சேர்த்து சமைக்கும் போது அதிகளவு திகட்டலையும் உண்டாக்கும். 

அரிசி மாவு சேர்க்காமல் உளுந்தங்களி செய்வது உண்டு என்றாலும் உளுந்து மாவுடன் சற்று அரிசி மாவு சேர்த்தால் ருசி வித்தியாசப்படும். உளுந்து மட்டும் போடும் போது பசை போன்று இருக்கும்.

உளுந்தை வறுக்காமல் செய்யலாம். அப்படி செய்தால் உளுந்தின் பச்சை வாடையை பெரும்பாலோனோர் விரும்ப மாட் டார்கள். 

அதனால் அந்த வாசம் வராமல் இருக்க உளுந்தை வறுத்து போடுவது நல்லது. பனங்கருப்பட்டி இல்லாதவர்கள் பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, நாட்டுவெல்லம் என ஏதாவது ஒன்றை பயனபடுத்தலாம்.

மாதவிடாய் காலங்களுக்கு ஒருவாரம் முன்னதாக செய்து சாப்பிட்டு பாருங்கள். மாதவிடாய் வலி இல்லாமல் சுகமாக உணர்வீர்கள்.

பழசுக்கு எப்போதும் மவுசு உண்டு என்று சொல்வார்கள் எதற்கு உண்டோ இல்லையோ நம் பாரம்பரிய பொருள்களுக்கு எப்போதும் மவுசும் உண்டு. அலாதியான சுவையும் உண்டு. முக்கியமாக ஆரோக்கியமும் உண்டு.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)