சுவையான மிளகு அடை செய்வது எப்படி?





சுவையான மிளகு அடை செய்வது எப்படி?

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. 
மிளகு அடை செய்வது
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். 

தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் மிளகில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை உடலுக்குள் நுழையும். பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.  

ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்து கொள்ளலாம். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக் கொள்ளவும். 

இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.  

தேவையான பொருட்கள்: 

புழுங்கலரிசி - 1 கப் 

பச்சரிசி - 1/2 கப் 

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

தேங்காய்த் துருவல் - 1/2 கப் 

தேங்காய் பொடியாக நறுக்கியது - 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு 

எண்ணை - தேவையான அளவு 

செய்முறை: 

அரிசியையும், பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி பருப்பை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, 

அத்துடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். மிக்ஸியி லிருந்து எடுக்கு முன், தேங்காய்த் துருவலைப் போட்டு ஓரிரண்டு சுற்றுகள் ஓட விட்டு எடுக்கவும். 

தோசைக் கல்லை காய விட்டு, சிறிது எண்ணை விட்டு, ஒரு கை மாவை எடுத்து அடையாக தட்டவும். அதன் மேல் சிறிது தேங்காய்த் துண்டுகளைத் தூவி விடவும். 

அடையைச் சுற்றி சிறிது எண்ணை விட்டு சிவக்க வேக விடவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். இந்த முறையில் செய்யப்படும் அடை, சற்று அழுத்தமாக இருக்கும். 

ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். மிருதுவான அடை வேண்டு மென்றால், மாவில் சிறிது தண்ணீரைச் சேர்த்து, அடை மாவு பதத்திற்கு கரைத்து, கரண்டியால் எடுத்து 

தோசைக் கல்லில் ஊற்றி, வட்டமாக பரப்பி, அதன் மேல் தேங்காய்த் துண்டுகளைத் தூவி சுட்டெடுக்கலாம். வெல்லம் மற்றும் வெண்ணையுடன் பரிமாறவும். காரம் தேவையென்றால், இட்லி மிளகாய் பொடியுடனும் சாப்பிடலாம். 

இந்த அடை கார்த்திகை பண்டிகையின் பொழுது பெரும் பாலானோர் வீடுகளில் செய்யப் படுவதால், இதை கார்த்திகை அடை என்றும் அழைப்பார்கள்.
Tags: