பரங்கிக்காய் வெல்ல அல்வா தயார் செய்வது எப்படி?





பரங்கிக்காய் வெல்ல அல்வா தயார் செய்வது எப்படி?

பரங்கிக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், இது எடை இழப்புக்கும் உதவுகிறது. 
பறங்கிக்காய் வெல்ல அல்வா
பரங்கிக்காய் உயிரணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆல்ஃபா கரோட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நிறைந்துள்ளது.

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

அவை கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையானவை
பறங்கிக்காய் துருவல் - 2 கப் (அழுத்தி அளக்கவும்)

பால் - 3/4 கப்

வெல்லம் பொடித்தது - 3/4 கப்

நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை

முந்திரி பருப்பு - சிறிது

பறங்கி விதை - சிறிது (விருப்பப்பட்டால்)

காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :

முதலில் ஒரு பெரிய அளவு பறங்கிக்காய் துண்டை எடுத்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சன்னமாகத் துருவிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு துருவலை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் பறங்கிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கிய பின் பாலைச் சேர்த்துக் கிளறவும். 

மூடி போட்டு வேக விடவும். பால் அனைத்தையும் இழுத்துக் கொண்டு காய் வெந்ததும், வெல்லத்தூளைப் போட்டு கிளறவும். வெல்லம் நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்) மீதமுள்ள நெய்யை விட்டு கிளறவும். 
கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். பறங்கி விதையை தூவி பரிமாறவும்.
Tags: