தோசைக்கு கத்திரிக்காய் ரசவாங்கி செய்வது !





தோசைக்கு கத்திரிக்காய் ரசவாங்கி செய்வது !

சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என்று தமிழர்கள் எந்த வெரைட்டியில் உணவை எடுத்துக் கொண்டாலும் அதில் தவறாமல் இடம்பெறும் மிக முக்கிய காயாக கத்திரிக்காய் இருக்கிறது.
கத்திரிக்காய் ரசவாங்கி
வெள்ளை நிற கத்திரிக்காய், பச்சை நிற கத்திரிக்காய், வயலெட் நிற கத்தரிக்காய் என்று வெவ்வேறு வண்ணங்களில், நம் மனம் கவர்ந்த சுவைகளில் கத்திரிக்காய் கிடைக்கிறது. 

பெயரளவில் இதனை காய் என்று குறிப்பிட்டாலும், இது பல வகையை சேர்ந்ததாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர். கத்திரிக்காயில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. 
இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காய் சாப்பிடலாம். 

இது குடல் நலனை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் உடலில் ரத்த சர்க்கரையை குறைக்க ஏதுவான இன்சுலின் உற்பத்தியை கத்திரிக்காய் ஊக்குவிக்கும்.

கத்திரிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அது நம் உடலில் ஏற்படுகின்ற செல் பாதிப்புகளை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்.:

கத்திரிக்காய் - 250 கிராம்,

தனியா - 2 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 2,

புளி - நெல்லிக்காய் அளவு,

தேங்காய் துருவல் - ஒரு கப்,

வெல்லம் - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை.:
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு சேர்த்து, புளியை கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.
தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்திருக்கும் கத்திரிக்கா யுடன் சேர்க்கவும்.

பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

குறிப்பு.:

இதைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.