காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்து விட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? இதுவரை நீங்கள் முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள்.
அந்த முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், இன்று அதை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையானவை :
முள்ளங்கி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
தேங்காய் – கால் மூடி
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முள்ளங்கியை பொடியாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.
பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பி லிருந்து இறக்கி ஆற விடுங்கள்.
அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.