மைசூர் பாகு செய்வது | Mysurpak !





மைசூர் பாகு செய்வது | Mysurpak !

தேவையானவை:

கடலைமாவு- 1 கப்

சர்க்கரை(சீனி)- 2 1/2 கப்

நெய்- 2 கப்

பால் – 1/2 கப்

செய்முறை:

1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும்(அதிகம் வதக்க வேண்டாம்).

2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும்.

3. குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும்.

மைசூர் பாகு

4. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை லேசாகச் சூடாக்கிக் கொட்டிக் கிளறி வரவும்.

5. கெட்டியாகும் பதத்தில் பூத்து வரும் வேளையில் நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தி கரண்டியால் சமமாக்கவும்.

6. சிறிது ஆறின பிறகு வில்லைகளாக்கவும். அதனை உடனே எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஆறிய பிறகு பிரித்த வில்லைகளை எடுக்க அழகாக வரும்.

7. சீனிப்பாகு மூலம் செய்வது விரைவில் முடியும் என்றாலும் மேற்கூறிய முறை பாகுப் பதத்தில் செய்யத் தெரியாதவர்களுக்கு உதவும். இம்முறையில் மிருதுவான, கரையக் கூடிய அளவில் சுவையான மைசூர்பாகுகளைத் தயார் செய்யலாம்.

பாகு வைத்துச் செய்யும் முறை:

1. கடலைமாவை நெய்யில் தனியாக வறுத்து வைக்கவும்.

2. ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு ஒரு கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வர வேண்டும். (இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர வேண்டும்)

3. பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.

4. மற்றொரு அடுப்பில் நெய்யைக் குறைந்த தீயில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலைமாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாகக் கரண்டியால் விட்டுக் கொண்டே கை விடாமல் கிளற வேண்டும்.

5. கலவை கெட்டியாகிப் பூத்து வரும் போது நெய் தடவின தாம்பாளத்திற்கு மாற்றி ஆறினதும் சதுரமாக வில்லைகள் போட்டு காற்றுப் புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
Tags: