விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. இந்த விழாவின் நாயகனான விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும்.
எனவே இந்நாளில் விநாயகருக்கு படைக்க பலவிதமான கொழுக்கட்டைகளை செய்வோம்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் அட்டகாசமான சுவையைக் கொண்ட கொழுக்கட்டை செய்ய நினைத்தால், இனிப்பு ரவா கொழுக்கட்டை செய்யுங்கள்.
இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இனி இனிப்பு ரவா கொழுக்கட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தண்ணீர் - 2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
ப்ரை நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்.