தாவர உணவுகளில் அசைவத்திற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது.
உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது.
சோயா உருண்டைகள் சோயாவை அரைத்து, அதன் சாரத்தைப் பிழிந்தெடுத்த பிறகு பெறப்படுகிற புண்ணாக்கு மாதிரியான ஒன்று தான்.
அதில் சத்துகளோ, அத்தியாவசிய அமினோ அமிலமோ இருக்காது. உருண்டை வடிவில், அவல் மாதிரி, இன்னும் மசாலா சேர்த்தெல்லாம் சோயா கிடைக்கிறது.
இதில் ஃப்ளேக்ஸ் வடிவில் கிடைக்கிற சோயாவை பொரியல், கூட்டு செய்யும் போதெல்லாம் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இன்று இந்த சோயாவை மட்டும் வைத்து சோயா கிரேவி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
சோயா சங்க்ஸ் எனப்படும் உருண்டைகள் - ஒரு கப்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் -2,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 6 பற்கள்,
சோம்பு - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 6,
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு:
பட்டை, சோம்பு , எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் பட்டை, சோம்பு, முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு கிளறவும். சோயாவையும் பிழிந்து சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் உப்பையும் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
மல்லித் தழைகளைத் தூவிப் பரிமாறவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு நல்ல சைடிஷ் ஆக இருக்கும்.