அல்வா என்றாலே நினைவுக்கு வருவது திருநெல்வேலி மாநகரம் தான். பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர்போன நெல்லை, தனக்கே உரிய சைவ உணவால் நாவூற வைக்கும்.
நெல்லையின் அடையாளமாகத் திகழும் சைவ உணவு வகைகளில் புளி மிளகாய் சாம்பாரும் ஒரு வகை . இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையானவை :
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
மிளகாய் - 150 கிராம்
நல்லெண்ணெய் - 50 கிராம்
புளி, உப்பு, வெல்லம் - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - சிறிதளவு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை :
வெங்காயத்தைத் தோல் உரித்து சிறிது சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் பாதி எண்ணெய் விட்டுப் பச்சை மிளகாயைப் போட்டு, பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
நன்றாகக் கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்து இறக்க வேண்டும். பிறகு இன்னொரு கடாயில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொட்ட வேண்டும்.
தோசை, இட்லிக்கும் தயிர்ச் சோற்றுக்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.