குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி செய்வது எப்படி?

தினமும் இட்லி சாப்பிடுவதால், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இட்லியில் நார்ச்சத்து மட்டுமல்லாமல், இரும்பு சத்தும் உள்ளது. 
குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி
இதனால், உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும். இட்லி மாவு புளிக்க வைக்கப்படும் போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகிறது. 

இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.

உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.
இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், காலையில் அதை வைத்து சூப்பரான கைமா இட்லி செய்யலாம். இந்த கைமா இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

இட்லி – 10

வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

தக்காளி – 2

பச்சை பட்டாணி – 1/4 கப்

குடமிளகாய் – 1

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் (தனியா) தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்

சோம்பு பொடி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பச்சை மிளகாய் – 1

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை அரைத்து கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
இட்லிகளை துண்டு களாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், 

அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். சூப்பரான கைமா இட்லி ரெடி!!!
Tags: