முளைக்கீரை பொரித்த குழம்பு செய்வது எப்படி?





முளைக்கீரை பொரித்த குழம்பு செய்வது எப்படி?

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். முளைக்கீரை உணவுக்குச் சுவை யூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது.
முளைக்கீரை பொரித்த குழம்பு
முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை  மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் 

சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய  நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும். 
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய  நோய்கள் குணமாகின்றன. சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். 

இந்த கீரையானது வெப்ப காய்ச்சலை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும். 

முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 

முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

முளைக்கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் போதுமான அளவில் கிடைக்கும். 
முளைக்கீரை அனைவரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான சத்து நிறைந்த ஒரு நல்ல கீரை.  இந்த முளைக்கீரையை பயன்படுத்தி முளைக்கீரை பொரித்த குழம்பு எளிதாக எப்படி செய்வது பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

நறுக்கிய முளைக்கீரை - 5 கப்

பயத்தம் பருப்பு - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

வெங்காய வடகம் (சிறியது) - 2

தேங்காய் துருவல் - அரை கப்

சீரகம் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முளைக்கீரை பொரித்தக் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்த மல்லித்தழை ஆகிய வற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு, அதனுடன் கீரையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
கீரை வெந்ததும், அதனுடன் வேக வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் வெங்காய வடகத்தை போட்டு தாளித்து குழம்பில் சேர்த்து கலக்கினால் சுவையான முளைக்கீரை பொரித்தக் குழம்பு ரெடி.
Tags: