தேவையானவை:
(தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு - 2 கப்,
எண்ணெய் - தேவையான அளவு.
(சாம்பாருக்கு) துவரம் பருப்பு - கால் கப்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
பெரிய சைஸ் தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 15,
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்,
மல்லித்தழை - 2 டீஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 3.
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்).
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை.
செய்முறை:
முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும்.
சாம்பார் பொடி சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காய வைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.
தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்),
எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும்.
சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.