இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?





இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?

0
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. 
இறால் கோலா உருண்டை குழம்பு
மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். 

சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் – முக்கால் கிலோ,

கடலை மாவு – அரை கப்,

சின்ன வெங்காயம் – 150 கிராம்,

பெரிய வெங்காயம் – 3,

தக்காளி – 4,

மீன் வறுவல் மசாலா – 50 கிராம்,

மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்,

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – சிறிதளவு,

சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன்,

இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,

தேங்காய் – அரை மூடி,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து வெது வெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும். கொத்த மல்லி, சின்ன வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகிய வற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி – பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகிய வற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டை களை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும். 

பிறகு, கொத்த மல்லி தூவி இறக்கினால்… சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)