முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்.
அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும்.
உடலின் சூட்டைத் தணிக்கும், செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும்.
வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.
சரி இனி அவல் கொண்டு சுவையான அவல் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
கெட்டி அவல் - 200 கிராம் (10 நிமிடம் ஊற விடவும்),
வேக வைத்த பாசிப்பருப்பு - 100 கிராம்,
பாகு வெல்லம் - 250 கிராம் (கரைத்து வடிகட்டவும்),
நெய் - 100 கிராம்,
குங்குமப்பூ - சில இதழ்கள்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள் - தலா 2 டீஸ்பூன்,
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
வேக வைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசல், நெய் ஊற்றி நன்கு கிளறவும். கெட்டியாகும் போது, ஊற வைத்த அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். (அதிக நேரம் கிளற வேண்டாம். அவல் சிதைந்து விடும்).
இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.