வயல் நண்டுக்கறி உண்பதால், வாதக்குடைச்சல் வலி, நெஞ்சு சளி, சிலவகை கரப்பான் எனும் தோல் நோய்கள், குடலிரைச்சல் முதலிய உடல் பாதிப்புகள் நீங்கும்.
ஆனால், பித்தத்தை அதிகரிக்கும். வயல் நண்டுக் கறியானது, கடல் நண்டுக் கறியை விட மூன்று மடங்கு ஆற்றலை உடலுக்களிக்கும்.
தவிர, சுண்ணாம்புச் சத்தும் வயல் நண்டு கறியில் தான் அதிகமாக உள்ளது.
கடல் நண்டுக் கறியானது, வயிற்று வலி, கரப்பான், சொறி சிரங்கு, ஒவ்வாமை, முதலான நோய்களை உண்டாக்கும். தொடர்ந்து உண்டு வந்தால், இரத்தக் கழிச்சலையும் உண்டாக்கும்.
நண்டைக் கறி வடிவில் சமைத்து உண்பதை விட, சூப் வடிவில் சமைத்து அருந்துவதே, அதிக பலன்களை, விரைவாக அளிக்க வல்லது.
சரி இனி நண்டு கொண்டு சுவையான மிளகு நண்டுக் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :.
நல்லெண்ணெய் - குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1 மூடி
மிளகு - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
மல்லித் தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிது
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
நண்டு - அரை கிலோ
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 4
செய்முறை :.
முதலில் நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகிய வற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும். இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும். பின்பு பரிமாறவும்.