காரசாரமான குர்குரே சிப்ஸ் செய்யும் முறை !





காரசாரமான குர்குரே சிப்ஸ் செய்யும் முறை !

கடைகளில் கிடைக்கும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டிகளில் குர்குரேவும் ஒன்று. 
காரசாரமான குர்குரே சிப்ஸ்
டீயோடோ அல்லது தனியாகவோ உண்ண குர்குரே சிப்ஸ்கள் ஒரு காரசாரமான மாலை நேர சிற்றுண்டி. இவை குறிப்பாக குட்டீஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
ஆனால் கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உடம்புக்கு கெடுதியான trans fat, சோடியம், உப்பு, சர்க்கரை மற்றும் பல்வேறு ரசாயனங்கள் உள்ளது. 

அதனால் இதை வீட்டிலேயே செய்து கொடுப்பது ஆரோக்கியமானது. எனினும் குர்குரேவை அதிகமாக உண்பதை தவிர்ப்பது நல்லது.

இவை கடைகளில் கிடைப்பது போன்ற சுவையிலேயே வீட்டிலும் எளிதாக செய்து விடலாம். 

இவை 10 லிருந்து 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மை கொண்டதினால் ஒரு ஏர் டைட் கண்டைனர் இல் போட்டு வைத்து கொள்ளலாம்.

அதனால் அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இப்பொழுது கீழே குர்குரே சிப்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
தேவையான பொருட்கள்

1/2 கப் பாஸ்மதி அரிசி

1/2 கப் சோள மாவு

1/4 கப் மைதா மாவு

3 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

3 மேஜைக்கரண்டி துவரம் பருப்பு

1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

1/2 மேஜைக்கரண்டி பெப்பர் தூள்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

1 மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்

1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

1 மேஜைக்கரண்டி தக்காளி பவுடர்

1 மேஜைக்கரண்டி சாட் மசாலா

1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசி, கடலை பருப்பு, மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரை மேஜைக்கரண்டி உப்பு, தக்காளி பவுடர், மற்றும் கால் மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் அம்ச்சூர் தூளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
காரசாரமான குர்குரே சிப்ஸ்
2 மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி, கடலை பருப்பு, மற்றும் துவரம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு இந்த அரைத்த கூழை ஒரு bowl ல் ஊற்றி அதில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, அரை மேஜைக்கரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூள், 
மல்லி தூள், தக்காளி பவுடர், பெப்பர் தூள், சாட் மசாலா, அம்ச்சூர் தூள் மற்றும் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இந்த மாவை மிதமான கெட்டி பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு ப்ளாஸ்டிக் கவரை எடுத்து அதில் கலந்து வைத்திருக்கும் இந்த மாவை ஊற்றி கவரை மேலே முறுக்கி ஒரு ரப்பர் பேண்ட்டை போட்டு வைத்துக் கொள்ளவும்.

(பாஸ்மதி அரிசி இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ளலாம்.)

அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து குர்குரேவை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

எண்ணெய் சுடுவதற்குள் மாவு இருக்கும் பிளாஸ்டிக் கவரில் ஓரத்தை சிறிதளவு கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடவும். 
எண்ணெய் சுட்டதும் அதில் சிறிது சிறிதாக இந்த மாவை குர்குரே வடிவத்தில் பக்குவமாக எண்ணெய்யில் பிழிந்து விடவும்.

குர்குரே சிப்ஸ்கள் ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு பொன் நிறம் வந்ததும் எடுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.

சூடு ஆறுவதற்குள் நாம் கலந்து வைத்திருக்கும் மசாலா தூளை இதன் மேலே தூவி கிளறிக் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான குர்குரே சிப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Tags: