கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?





கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

மிளகு - 2 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

புளி - எலுமிச்சம் பழ அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கறிவேப்பிலை குழம்பு
உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். 
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகிய வற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகிய வற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, 

வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, 
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். 

விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.
Tags: