தேவையானப் பொருள்கள்:
கருவாடு - சுமார் 10 எண்ணிக்கையில் (காரை, நீர்சுதும்பு, சென்னாவரை, சங்கரா, பாறை போன்றவை நன்றாக இருக்கும்)
வள்ளிக்கிழங்கு - 2
புளி - பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - பாதி
முழு பூண்டு - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை
செய்முறை:
புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வைக்கவும். கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.
சின்ன வெங்காயம் நறுக்கி (அ)தட்டி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும். பூண்டு உரித்து வைக்கவும்.
வள்ளிக் கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளலாம். முதலிலேயே நறுக்கி விட்டால் நிறம் மாறிவிடும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம், அடுத்து வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி வதக்கி, அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி, அடுத்து மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.
பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கிழங்கை நறுக்கி குழம்பில் போட்டு கிளறி விட்டு மூடி கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து கிழங்கு வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் காய் வெந்து, குழைந்து விடும் என்ற பிரச்சினை இல்லை. எவ்வளவு வெந்தாலும் நன்றாகவே இருக்கும்.
பிறகென்ன; சூடான சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.குழம்பு ஆறிய பிறகு தான் இன்னும் சுவையாக இருக்கும்.
அடுத்த நாள் தான் அதற்கு மேலும் சுவையாக இருக்கும். மேலும் இக்குழம்பு இட்லி,தோசை போன்ற வற்றிற்கு அருமையாக இருக்கும்.