அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?





அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

மிகவும் சுவையாக அப்படியே ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இந்த பிரியாணி இருக்கும். இந்த சிக்கன் பிரியாணியில் கவனிக்க வேண்டியவை, கண்டிப்பாக நன்றாக பழுத்த தக்காளி சேர்க்க வேண்டும்.
அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது
பச்சை மிளகாய் கூடுதலாக சேர்த்தால் சுவையாக இருக்கும். மஞ்சள் தூள் பிரியாணியில் சேர்க்க வேண்டாம். சிக்கனை தண்ணீரில் கழுவும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ளவும்.

அரிசியினை சமைக்கும் முன்பு 1 மேஜை கரண்டி நெயில் சுமார் 1 – 2 நிமிடங்கள் வறுத்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் சாதம் நன்றாக இருக்கும்.

பிரியாணியில் கொத்தமல்லி + புதினாவினை பொதுவாக சிக்கனுடன் சேர்த்து வதக்கி விடுவோம்.

ஆனால் இந்த பிரியாணில் அரிசி சேர்க்கும் பொழுது தான் புதினா, கொத்தமல்லி யினை சேர்க்க வேண்டும். இந்த பிரியாணியில் தயிர் சேர்க்க தேவை யில்லை.
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி – 3 கப்

வெங்காயம் – 1 பெரியது

தக்காளி – 2 பெரியது

பச்சைமிளகாய் - 4 – 5

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

எண்ணெய் – 2 மேஜை கரண்டி

நெய் – 2 மேஜை கரண்டி

கடைசியில் சேர்க்க :

புதினா – 1 கைபிடி அளவு

கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்

மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி

உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :

பட்டை- 1 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

செய்முறை :
அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி
வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக வெட்டவும். புதினா + கொத்த மல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். 

சிக்கனை சுத்தம் செய்து அத்துடன் 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக கரைந்தவுடன், ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து வேக விடவும்.

சிக்கனை பாதி வெந்தவுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ( 1 கப் அரிசிக்கு 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
ஒரு பாத்திரத்தில் 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியினை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து கொண்டு நெயில் 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.

ரைஸ் குக்கரில் அரிசி + சிக்கன் கலவை + புதினா, கொத்தமல்லி சேர்த்து 15 - 20 நிமிடங்கள் வேக விடவும். (குறிப்பு : பிரஸர் குக்கர் என்றால் 1 விசில் வரும் வரை வேக விடவும்.)

கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து மேலும் இருக்கும் 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவையான பிரியாணி ரெடி.
Tags: