சமையல் குறிப்புகள் !





சமையல் குறிப்புகள் !

காய்கறிகள் நறுக்கத் தொடங்கு முன் : - 

காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கை விரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. 
வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

பால் கெடாமல் இருக்க : - 

பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் பால் கெடாமல் இருக்கும்.

பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

அரிசி குருணையில் உப்புமா செய்தால் : - 

அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும் போது,

சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும்.

இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.
உப்பில் ஈரக்கசிவா? : - 

சமைய லறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

இட்லி மிருதுவாக இருக்க : - 

இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும்.

இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.

இட்லிக்கு நல்லெண் ணெயை உபயோகப் படுத்த : - 

இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப் படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

பெருங்காயம் கடினமாக இருக்கிறதா? : - 
பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும்.

அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டு விட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

காய்கறிகளில கசப்பு சுவை நீங்க : - 

காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

கிரேவி வகையறாக்கள் செய்யும் போது : - 

கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி,

அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
சுவையான முறுக்கு செய்ய : - 

மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேக வைத்து எடுத்து,

சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

பானங்கள் சுவையாக இருக்க : - 

காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.

ஜவ்வரிசி கிளரும் போது : - 

ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும் போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம்

அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும் போது தனி மணமும், ருசியும் காணலாம்.

பூரிக்கு மாவு பிசையும் போது : - 

பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

எண்ணெய்க் காறலை போக்க : - 

எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும் போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு

அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
அடை செய்யும் போது : - 

அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது

பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
Tags: